இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி


இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2019 10:23 AM GMT (Updated: 22 Aug 2019 10:23 AM GMT)

இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது. இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டுள்ளன. 

இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். பயங்கரவாதமும் - பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என கூறிய இந்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என கூறிவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர்,  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென குறிப்பிட்டுள்ளார். 

 "அவர்களுடன் பேசுவதற்கு எதுவும் கிடையாது.  அதாவது, நான் பேச்சுக்காக அனைத்தையும்  செய்திருக்கிறேன். இப்போது நான் திரும்பிப் பார்க்கும்போது, அமைதி மற்றும் உரையாடலுக்காக நான் செய்த அனைத்து முயற்சியையும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக பார்த்துள்ளனர் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.  

"மிக முக்கியமான விஷயம்" காஷ்மீரில் எட்டு மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ள இம்ரான் கான்,  "இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை நடக்கப்போகிறது என்று நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் உள்ள ஒரு பாசிச மற்றும் இந்து மேலாதிக்கவாத அரசு பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரில், இஸ்லாமிய மக்களை ஒழிக்கவும், இந்துக்களுடன் இப்பகுதியை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. 
 
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த காஷ்மீரில் இந்தியா ஒரு மோசமான  நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். மேலும் அதற்கு பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்று கவலைப்படுவதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.  

இம்ரானின் கருத்துக்களுக்கு இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன்,  இம்ரான் கானின் விமர்சனத்தை நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது. 
 
 "நாங்கள் சமாதானத்தை நோக்கி ஒவ்வொரு முறையும் மேற்கொண்ட முயற்சி எங்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான, சரியான நடவடிக்கை பாகிஸ்தான் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” ஜம்மு காஷ்மீரில் நிலவும் நிலைமையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பொது பயன்பாட்டு சேவைகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் பொதுவாக செயல்படுகின்றன, இயல்புநிலை திரும்பி வருகிறது" என கூறியுள்ளார் ஹர்ஷ்வர்தன்.

Next Story