ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி


ஈராக்கில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி
x
தினத்தந்தி 24 Aug 2019 10:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:28 PM GMT)

ஈராக்கில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் பாபில் மாகாணத்தில் அல் முசாயப் என்ற நகரம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், பொதுமக்கள் ஏராளமாகக் கூடி வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை மும்முரமாக வாங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது மிகுந்த சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. பெரும் புகை மண்டலம் உருவானது. அங்கிருந்த பொதுமக்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். உடனடியாக பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏராளமான கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயின.

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உருக்குலைந்து போயின. கட்டிடங்கள் பெருத்த சேதம் அடைந்தன.

படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்பு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டுதான் வெடித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


Next Story