வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை


வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
x
தினத்தந்தி 25 Aug 2019 2:07 AM GMT (Updated: 25 Aug 2019 2:07 AM GMT)

வடகொரிய தலைவர் கிம் முன்னிலையில் மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது.

சியோல்,

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதன்பின்பு, வடகொரிய தலைவரிடம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதன் முடிவில், அணு ஆயுத பரிசோதனை கைவிடப்படும் என வடகொரியா அறிவித்தது.

இந்நிலையில், மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது என தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதுபற்றி அந்நாடு வெளியிட்டசெய்தியொன்றில், வடகொரியா, தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.

அவை இரண்டும் மேக் 6.5 என்ற வேகத்தில் 380 கி.மீட்டர் தொலைவுக்கு, 97 கி.மீட்டர் உயரத்தில் பறந்து சென்றது.  எங்களுடைய ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருகிறது.  தயார் நிலையிலும் உள்ளது என்று தெரிவித்து இருந்தது.

இது, கடந்த ஜூலை 25ந்தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை பரிசோதனை ஆகும்.  இதற்கு முன், ஜூலை 25, ஜூலை 31, ஆகஸ்டு 2, ஆகஸ்டு 6, ஆகஸ்டு 10 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையின் கீழ், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிக பெரிய லாஞ்சரான ‘சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்’ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி கொரிய மத்திய செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதம் ஆக திகழும் என கிம் கூறினார்.

எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார் என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story