ரத்தத்தை கொடுத்தாவது மீட்டெடுப்போம், அமேசானை காக்க களமிறங்கிய பழங்குடிகள்


ரத்தத்தை கொடுத்தாவது மீட்டெடுப்போம், அமேசானை காக்க களமிறங்கிய பழங்குடிகள்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:47 AM GMT (Updated: 25 Aug 2019 11:47 AM GMT)

ரத்தத்தை கொடுத்தாவது மீட்டெடுப்போம் என அமேசானை காக்க பழங்குடிகள் களமிறங்கியுள்ளனர்.



பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. 

தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்தன. இதனையடுத்து அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

இதற்கிடையே ரத்தத்தை கொடுத்தாவது மீட்டெடுப்போம் என அமேசானை காக்க பழங்குடிகள் களமிறங்கியுள்ளனர். அங்கு அதிகமாக வசிக்கும் முரா பழங்குடியின மக்களின் தலைவர் பேசுகையில், அமேசான் காடுகளின் அழிவு ஒவ்வொருநாளும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் இக்காடு தன் இறுதி நாளை நோக்கி செல்வதை பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தை எங்களால் உணர முடிகிறது. இந்த உலகத்துக்கு காடுகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு காடுகள் தேவை, எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு காடுகள் தேவையாகும். எங்களுடைய கடைசி துளி ரத்தத்தை கொடுத்தாவது காட்டை மீட்டெடுப்போம் எனக் கூறியுள்ளார். 

காடுகளை அழிக்க தேவையானவற்றை அவர்கள் செய்கிறார்கள். எங்களுடைய பகுதியை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம் என வேதனையுடன் கூறுகிறார்கள் பழங்குடியின மக்கள். 


Next Story