அமெரிக்காவில் இ சிகரெட்டால் ஒருவர் உயிரிழப்பு


அமெரிக்காவில் இ சிகரெட்டால் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 25 Aug 2019 9:08 PM GMT)

அமெரிக்காவில் இ சிகரெட் பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்தார்.

நியூயார்க்,

சிகரெட் புகைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கும், புகையிலையால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், புகையிலை இல்லாமல் பேட்டரியில் இயங்கும் இ சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள் இ சிகரெட் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் சமீப காலங்களில் இ சிகரெட்டை புகைக்கும் அமெரிக்க இளைஞர்கள் பலர் மூச்சுத்திணறல், மயக்கம், இருமல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இ சிகரெட்டால் ஏற்பட்ட நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்ததாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இ சிகரெட் தொடர்பான நோயால் அமெரிக்காவில் ஒருவர் உயிர் இழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில தினங்களில் மட்டும் அமெரிக்காவின் 22 மாகாணங்களில் சுமார் 200 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து மாகாண மருத்துவர்களிடமும் தொடர்பில் இருப்பதாகவும், அத்தகைய நோயாளிகளின் நிலை குறித்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story