கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ


கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 26 Aug 2019 10:31 AM GMT (Updated: 26 Aug 2019 11:09 AM GMT)

அமெரிக்காவில் கடை ஒன்றில் திருடி விட்டு தன்னுடன் வந்த குழந்தையை பெண் ஒருவர் மறதியில் விட்டு சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.

நியூஜெர்சி,

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மிடில்டவுன் நகரில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் பம்பி பேபி என்ற கடை ஒன்று உள்ளது.  இந்த கடைக்கு 3 குழந்தைகளுடன், 3 பெண்கள் சென்றனர்.  அந்த பெண்களில் 2 பேர் கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.  இதனிடையே 3வது பெண் அங்கிருந்த ஸ்டிராலர் (குழந்தையை உட்கார வைத்து, கொண்டு செல்லும் தள்ளுவண்டி) ஒன்றை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு கடையை விட்டு வெளியேறினார்.

ஆனால் தன்னுடன் வந்த குழந்தையை மறந்து கடையிலேயே விட்டு சென்றுள்ளார்.  மற்ற பெண்களும் வெளியேறி விட்டனர்.

இதன்பின்பே ஒரு குழந்தை கடைக்குள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.  இதனால், சம்பவம் நடந்து 6 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த பெண் கடைக்கு சென்று அந்த குழந்தையை வெளியே அழைத்து செல்கிறார்.  இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுபற்றி கடை உரிமையாளர் எனெலியோ ஆர்டிகா கூறும்பொழுது, வாழ்வதற்காக ஒரு பொருளை திருட வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டால் அது தனிப்பட்ட பிரச்னை.  தனிப்பட்ட விவகாரம்.

ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாத குழந்தைகளை நீங்கள் கொண்டு வருவது, பின்பு அதனை கவனிக்காமல் விட்டு செல்வது என்பது என்னை அதிகம் பாதித்து விட்டது.  அதனாலேயே இந்த வீடியோவை நான் சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிர்ந்து உள்ளேன் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவம் உண்மையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.  ஏனெனில், அந்த பெண் எடுத்து சென்ற ஸ்டிராலர் உண்மையில் 300 டாலர் மதிப்புடையது.  ஆனால் கடையில் அதனை விட அதிக விலை கொண்ட பொருட்கள் இருந்தன.  அவர் எடுத்து சென்ற ஸ்டிராலருக்கு பின்னால் இருந்த மற்றொரு ஸ்டிராலர் ஆயிரம் டாலர் விலை கொண்டது என எனெலியோ கூறினார்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரில் மரியான் கேஷ் (வயது 23) மற்றும் நான் மெக்கார்த்தி (வயது 20) ஆகிய 2 பெண்களை பிடித்து உள்ளனர்.  அவர்கள் மீது குற்ற சதி மற்றும் கடையில் கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  திருடப்பட்ட ஸ்டிராலர் திரும்ப கிடைத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story