குல்பூஷண் ஜாதவுடன் இந்திய அதிகாரி சந்திப்பு - பாகிஸ்தான் சிறையில் நடந்தது


குல்பூஷண் ஜாதவுடன் இந்திய அதிகாரி சந்திப்பு - பாகிஸ்தான் சிறையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Sep 2019 11:16 AM GMT (Updated: 3 Sep 2019 12:10 AM GMT)

கைதாகி 3½ ஆண்டுகளில் முதல் முறையாக குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் சிறையில் இந்திய அதிகாரி சந்தித்து பேசினார்.

இஸ்லாமாபாத்,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பலுசிஸ்தான் மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் பாகிஸ்தான் கூறியது.

ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. அவர் ஈரானில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டு, கைது நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

இருப்பினும், ஜாதவ் மீது பாகிஸ்தானில் உள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை ராணுவ கோர்ட்டு, அவசர கோலத்தில் விசாரித்து அவர் குற்றவாளி என முடிவு செய்து, 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, மராட்டிய மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைது செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை ஒரு முறை கூட தூதரக ரீதியில் இந்திய தரப்பில் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

உடனடியாக இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது.

மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வேயை ஆஜராகி, வாதாட வைத்தது.

ஜாதவை தூதரக ரீதியில் சந்தித்துப்பேசக்கூட வாய்ப்பு தரப்படவில்லை; இது 1963-ம் ஆண்டு, தூதரக உறவுகள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வியன்னா உடன்படிக்கை விதிகளை மீறிய செயல் என்று இந்தியா சுட்டிக்காட்டியது.

அதைத் தொடர்ந்து ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை அமல்படுத்த தடை விதித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு 2017-ம் ஆண்டு, மே மாதம் 9-ந் தேதி உத்தரவிட்டது.

முடிவாக ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்து கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி, சர்வதேச கோர்ட்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.

மேலும், அவரது மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அத்துடன் ஜாதவுக்கு தூதரக நீதியிலான தொடர்புக்கு கூட வாய்ப்பு தராமல் பாகிஸ்தான் வியன்னா உடன்படிக்கையின் பிரிவு 36(1)-ஐ மீறி உள்ளது என சர்வதேச கோர்ட்டு தீர்ப்பில் கோடிட்டு காட்டியது. ஜாதவை இந்தியா தூதரக ரீதியில் சந்தித்துப்பேச அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜாதவை தூதரக ரீதியில் சந்தித்துப்பேச அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கூறியது. ஆனால் இந்த சந்திப்பை எப்படி நடத்துவது என்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ஆகஸ்டு 2-ந் தேதி நடந்திருக்க வேண்டிய சந்திப்பு நடக்கவில்லை.

மேலும், தடைகளோ, அச்சுறுத்தலோ இன்றி தூதரக ரீதியில் ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இப்போது 1 மாத காலம் கடந்த நிலையில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. இந்த சந்திப்பு 2-ந் தேதி (நேற்று) நடக்கும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் டுவிட்டரில் தெரிவித்தார்.

இதையடுத்து ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்திப்பார் என்பது உறுதியானது.

அதன்படி கவுரவ் அலுவாலியா, முதலில் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு அவர் செய்தித்தொடர்பாளர் முகமது பைசலை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் கிளைச்சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள ஜாதவை அவர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ஏறத்தாழ 1 மணி நேரம் நீடித்தது என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜாதவ் கைதாகி 3½ ஆண்டுகள் ஆன நிலையில், இப்போதுதான் முதல் முறையாக இந்திய தரப்பில் தூதரக ரீதியில் அவரை சந்தித்துப் பேச பாகிஸ்தான் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஜாதவை அவரது தாயார் அவந்தியும், மனைவி சேட்டன்குல்லும் 2017-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி ஒரே ஒரு முறை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்துப் பேச பாகிஸ்தான் அனுமதித்தது நினைவுகூரத்தக்கது.

ஜாதவை பாகிஸ்தான் சிறையில் இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்தித்து பேசியது பற்றி, ஜாதவின் தாயார் அவந்தியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன..


Next Story