இந்திய தூதரகம் தாக்கப்பட்டது வருந்தத்தக்கது -லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சர்
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த வன்முறை போராட்டம் வருத்தமளிப்பதாக லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தூதரக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது.
இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட போராட்டக்காரர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வடமேற்கு காம்பிரிட்ஜ் தொகுதி உறுப்பினர் ஷைலேஷ் வாரா பேசியபோது, இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் பேசும்போது, இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு இது வருந்தத்தக்கது என்றும் இதுபோன்று எங்கும் நடக்கவே கூடாது என்றும் கூறினார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story