பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்


பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2019 5:21 AM GMT (Updated: 10 Sep 2019 5:29 AM GMT)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத்,

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியவன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்த நிலையில், கடுமையான சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கைது செய்தது. 

இந்த நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுவதற்காக மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதேபோல், பிற பயங்கரவாத இயக்கங்களும் வெளிப்படையாக தங்களின் செயல்பாடுகளை துவங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எல்லையோர பகுதிகளான சைல்கோட் - ஜம்மு மற்றும் ராஜஸ்தானில் உள்ள செக்டார்களில் வரும் நாட்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் வகுத்து உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்து வருகிறது.  இந்த தகவல்களால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story