சமரச பேச்சுவார்த்தை ரத்தானதற்கு தலீபான்கள் எதிர்ப்பு - அமெரிக்காவுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை


சமரச பேச்சுவார்த்தை ரத்தானதற்கு தலீபான்கள் எதிர்ப்பு - அமெரிக்காவுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Sep 2019 6:45 AM GMT (Updated: 9 Sep 2019 11:42 PM GMT)

சமரச பேச்சுவார்த்தை ரத்தானதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தலீபான் பயங்கரவாதிகள் இந்த முடிவு அமெரிக்காவுக்கு கூடுதல் இழப்பை ஏற்படுத்தும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலீபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.

எனினும் இந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களே அதிகளவில் கொல்லப்படுவதால், போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அரசுகள் முனைப்பு காட்டின.

இதன் பலனாக தலீபான் பயங்கரவாத அமைப்பும், அமெரிக்க அரசும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. அதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் தலீபான் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், தலீபான்களின் நீண்டகால கோரிக்கையான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி 20 வாரங்களுக்குள் 5,400 படை வீரர்களை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதற்கு பிரதிபலனாக அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தாக்க முற்படும் பயங்கரவாத குழுக்களுக்கான தளமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் பயன்படுத்தப்படாது என தலீபான் அமைப்பு உறுதி அளித்தது.

அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே ஏற்பட்ட இந்த முக்கிய உடன்பாடானது ஆப்கானிஸ்தானின் நீண்டகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்குவகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற இருந்த தலீபான் தலைவர்களுடனான சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்த டிரம்ப், தலீபான்களுடனான சமரச பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

டிரம்பின் இந்த அதிரடி முடிவு தலீபான் பயங்கரவாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தலீபான்கள் தலைவர்கள் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தையை ரத்து செய்த டிரம்பின் முடிவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும், வரும் காலங்களில் அமெரிக்கர்கள் அதிக அளவில் கொல்லப்படுவார்கள் என்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிமுல்லா முஜித், அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தப் பேச்சுவார்த்தை ரத்து அமெரிக்காவுக்கு இன்னும் கூடுதல் இழப்பை தரும். அமெரிக்கப் படைகள் தலீபான்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இது அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.

அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று உலக நாடுகளுக்கு எதிர்காலத்தில் உணர்த்தும். ஏராளமான அமெரிக்கர்கள் கொல்லப்படலாம். பொருளாதார இழப்புகளும் ஏற்படும்.

எனினும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகளை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம். போருக்கு பதிலாக பேச்சுவார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இறுதிவரை நாங்கள் அதற்கு உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story