பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசலை விட பால் அதிக விலை -லிட்டர் ரூ.140


பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசலை விட பால் அதிக விலை -லிட்டர் ரூ.140
x
தினத்தந்தி 11 Sep 2019 5:23 AM GMT (Updated: 11 Sep 2019 5:23 AM GMT)

பாகிஸ்தானில் பெட்ரோல் டீசலை விட அதிக விலையில் பால் விற்கப்படுகிறது.பெட்ரோல் லிட்டர் ரூ.113, பால் ரூ.140.

கராச்சி, 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை  நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய  விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர்.

பாகிஸ்தானில் ஏறக்குறைய 100  தயாரிப்புகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதியில் பெரும்பகுதி பேரீட்சை, அத்தி, அன்னாசிப்பழம், வெண்ணெய், கொய்யா, மாம்பழம் மற்றும் உலர்ந்த சிமெண்ட், எள் விதைகள், ஜிப்சம் ஆகியவை  ஆகும்.

இந்தியாவுடான வணிக உறவை முறித்துக்கொண்ட பாகிஸ்தானுக்கு தக்காளியின் விலை மட்டுமல்ல, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. அதாவது பெரும்பாலான அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.  பாகிஸ்தானின் காய்கறி சந்தையிலும் விலை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில், மொகரம் பண்டிகை நாட்களில் பாலின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, அந்தச் சமயங்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டின் மொகரம் பண்டிகை நேற்று பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்டது.

ஆனால், அங்கு ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலின் விலை அதைவிட அதிகரித்துள்ளது, அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சி, சிந்த், இஸ்லாமாபாத் போன்ற பெரிய மாகாணங்களில்தான் இவ்வளவு அதிக விலைக்கு பால் விற்கப்பட்டுள்ளது. ”இந்த வருடம் பாலின் வரத்து குறைந்துள்ளதால், கராச்சி போன்ற இடங்களில் ஒரு லிட்டர் பால் 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது” என ஒரு வியாபாரி ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக விலைக்கு பால் வாங்கியதில்லை எனப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானின் மிகவும் சரிவடைந்த பொருளாதார நிலையை இந்தப் பால் விலை காட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, ஆலோசனை வழங்க, தங்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக சமீபத்தில் பன்னாட்டு நிதியம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பால் விலையைக்  கட்டுப்படுத்தும் கராச்சி கமிஷனர் இப்திகார் ஷல்வானி நிர்ணயித்த விலை  ரூ.94 என கூறப்படுகிறது. அதையும் தாண்டி, 140 ரூபாய்க்கு பால்  விற்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பாகிஸ்தான் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதால், இந்தியாவைத் தவிர கிட்டத்தட்ட எல்லா நாடுகளுடனும் பாகிஸ்தானின் இறக்குமதி ஏற்கனவே எதிர்மறையான வளர்ச்சியில் உள்ளது.

Next Story