இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்


இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:09 AM GMT (Updated: 13 Sep 2019 10:09 AM GMT)

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜெனீவா

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஷா மஹ்மூத் குரேஷி, கூட்டத்திற்கிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது. போர் நடைபெற்றால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் புரிந்து கொள்ளும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிஷெல் பேச்லெட்டை சந்தித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 அழைப்பை ஏற்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிஷெல் பேச்லெட்டும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வைத்து பார்த்தால் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண பன்முக அமைப்பு அல்லது 3வது தரப்பின் மத்தியஸ்தம் தேவைப்படலாம்  அந்தப் பணியை அமெரிக்கா செய்யும் பட்சத்தில் அது முக்கியத்துவம் பெறும். ஏனெனில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஷா மஹ்மூத் குரேஷி கடந்த செவ்வாய்க்கிழமை பேசியபோது, "ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். அப்போது இந்திய தரப்பில், "சர்வதேச பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தானிடம் இருந்து வரும் ஜோடிக்கப்பட்ட கதை" என்று பதிலடி கொடுக்கப்பட்டது.

Next Story