பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை


பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Sep 2019 11:15 PM GMT (Updated: 13 Sep 2019 11:02 PM GMT)

பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்துக்கு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சொந்தமாக சொகுசு பங்களா உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மன்னரின் மகளும், இளவரசியுமான ஹசா பின்ட் சல்மான் அல் சவுத், இந்த சொகுசு பங்களாவில் தங்கியிருந்தபோது, எகிப்து நாட்டை சேர்ந்த பிளம்பரான அஷ்ரப் என்பவர் வேலைக்கு வந்தார்.

அப்போது, இளவரசி ஹசா தனது பாதுகாவலரை ஏவி பிளம்பர் அஷ்ரப்பை சரமாரியாக தாக்கியதாகவும், மேலும் அவரை கீழ்த்தரமாக நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அஷ்ரப் அளித்த புகாரின் பேரில் இளவரசி ஹசா மீது வழக்கு தொடரப்பட்டு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் இளவரசி ஹசா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதே சமயம் நல்லெண்ண அடிப்படையில் இளவரசியின் சிறை தண்டனையை ரத்து செய்த நீதிபதி, 10 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சத்து 87 ஆயிரம்) அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அதே போல் இளவரசியின் பாதுகாவலருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் நல்லெண்ண அடிப்படையில் அது ரத்து செய்யப்பட்டது. அவரை 5 ஆயிரம் யூரோ (ரூ.3 லட்சத்து 93 ஆயிரம்) அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story