போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
முசாபராபாத்,
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக தோற்கடித்தது.
இருப்பினும், காஷ்மீர் பிரச்சினையை எப்படியாவது பூதாகரமாக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு வரும் இம்ரான் கான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது:- காஷ்மீர் பிரச்சினை தற்போது சர்வதேச அளவில், முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்க, நாங்கள் தான் காரணம். நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது எதுவென்றால், நான் காஷ்மீரின் துாதுவராக உலகம் முழுவதும் செல்வேன்.
இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து உலகுக்கு சொல்வேன். நாம் இப்போது பார்க்கும் இந்தியா, நேரு, காந்தி காலத்தில் இருந்த இந்தியா அல்ல. அடக்குமுறை காரணமாக, மக்களை பயங்கரவாதத்துக்கு துாண்டி வருகின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திருப்புவதற்காக பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வருகிறார்கள் என்று இந்தியா சொல்லும் என்பது எனக்குத் தெரியும்.
எனினும், நாங்கள் இம்முறை அதை அனுமதிக்கப்போவது இல்லை. போர் வெடித்துவிட்டால் இறுதிமூச்சு வரை இந்த தேசம் போராடும். காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story