உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை


உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 14 Sep 2019 11:30 PM GMT (Updated: 14 Sep 2019 9:56 PM GMT)

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தினர். இதில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, வயல் தீப்பிடித்து எரிந்தன.

துபாய்,

எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், சவுதி அராம்கோ என்ற அரசு நிறுவனம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் நடத்தி வருகிறது.

அங்கு, தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து நேற்று காலையில் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றன.

ஆளில்லா விமான தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீப்பிடித்து எரிந்தன. வானை எட்டுகிற அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீயினால், பெரும் கரும்புகை மண்டலமும் உருவானது.

அதிகாலை 4 மணிக்கே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்த தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் பெருத்த சேதத்துக்கு ஆளாகின.

இதை சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாலை 4 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து, அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கின. இரு இடங்களிலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன” என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது யார் என்பது பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா அல்லது இரண்டு இடங்களிலும் செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது பற்றியும் எதுவும் கூறப்படவில்லை.

ஆளில்லா விமான தாக்குதல் நடந்த இடங்களில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக தாக்குதலின் பாதிப்புகள் எந்தளவுக்கு இருந்தன என்பது தெரியவரவில்லை.

இந்த தாக்குதல்களை ஏமன் நாட்டைச்சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக அந்த கிளர்ச்சியாளர்களின் அல் மசிராஹ் டெலிவிஷனில் வெளியிட்ட செய்தியில், “அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, குராய்ஸ் எண்ணெய் வயல் ஆகியவற்றில் கிளர்ச்சியாளர் கள் 10 ஆளில்லா விமானங் களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்” என கூறப்பட்டது.

ஏமனில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் அதிபர் மன்சூர் ஹாதி படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களமிறங்கி வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடி தருகிற விதத்தில்தான் சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story