மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை


மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 9:39 PM GMT)

மெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கும்பல்களின் வன்முறை களமாக இருந்து வருகிறது. தொழில் போட்டியில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதால் பலர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான குவாடலஜரா நகரில் உள்ள பாழுங்கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதையடுத்து, உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் கிணற்றில் சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துபோயினர்.

மனித உடல் பாகங்கள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல்பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுனர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.


Next Story