சவுதி எண்ணெய் உற்பத்தி பற்றிய கணிப்பு எதிரொலி; எண்ணெய் விலை 5 சதவீத வீழ்ச்சி


சவுதி எண்ணெய் உற்பத்தி பற்றிய கணிப்பு எதிரொலி; எண்ணெய் விலை 5 சதவீத வீழ்ச்சி
x
தினத்தந்தி 17 Sep 2019 3:54 PM GMT (Updated: 17 Sep 2019 3:54 PM GMT)

எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா வெகுவிரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்ற கணிப்பு எதிரொலியாக எண்ணெய் விலை 5 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

லண்டன்,

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் இருந்து வருகிறது. அங்கு புக்யாக் நகரில் அமைந்துள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அருகில் குரெய்ஸ் நகரில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவை மீது கடந்த 14ந்தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி உள்ளது.

இந்த எதிர்வினைகள் ஒருபுறம் இருக்க, விமான தாக்குதலால் சவுதி எண்ணெய் உற்பத்தி துறை நிலைகுலைந்து போயுள்ளது. தங்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடு பாதியாக குறைத்து உள்ளது. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.  இந்த நிலையில், எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா வெகுவிரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி 2 முதல் 3 வாரங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என அந்நாட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதன் எதிரொலியாக எண்ணெய் விலை 5 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

Next Story