இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான்


இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான்
x
தினத்தந்தி 18 Sep 2019 2:20 PM GMT (Updated: 18 Sep 2019 2:20 PM GMT)

இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370- ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்துச்சென்றது. எனினும், எந்த ஆதரவும் கிட்டாமல் விரக்தியில் உள்ள பாகிஸ்தான் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகிறது. 

இதற்கிடையில்,  காஷ்மீரில் அமைதி நிலவ  இந்தியா- பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பே இல்லை என கூறி உள்ளார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில்  ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story