தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்
தெய்வீக சக்தி கொண்டது என்னும் நம்பிக்கையில் 10 அடி மலைப்பாம்பை மக்கள் கடத்தினர்.
டோடோமா,
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெய்டா மாகாணத்தில் காசாலா என்ற காடு உள்ளது. இந்த காட்டின் அருகே உள்ள கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அண்மையில் கால்நடைகளை மேய்க்க காசாலா காட்டுக்குள் சென்றபோது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றின் அருகே நின்று சிலர் பூஜை செய்வதை பார்த்தனர்.
இது குறித்து அவர்கள் கிராமத்தில் உள்ள சக மக்களிடம் கூறியபோது, அவர்கள் அந்த பாம்பு தெய்வீக சக்தி கொண்டது என்றும், அதற்கு உணவு படைத்தால் விரும்பியது நடக்கும் என்றும் கூறினர். இதை கேட்டு காட்டுக்குள் படையெடுத்த மக்கள் அந்த பாம்பை பிடித்து வைத்துக்கொண்டு அதிகமான ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றை உணவுகளாக கொடுத்து, பாம்பிடம் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்தனர். அளவுக்கு அதிகமான வழங்கப்பட்ட உணவுளை தின்ன முடியாமல் பாம்பு திணறி உள்ளது. இதற்கிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுக்குள் அதிக எண்ணிக்கையில் மக்கள் செல்வதை கவனித்த வனத்துறை அதிகாரிகள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர்.
அதன் பின்னரே காட்டுக்குள் நடக்கும் விபரீதம் குறித்து அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மலைப்பாம்பை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story