அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்


அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:39 PM GMT (Updated: 20 Sep 2019 10:39 PM GMT)

அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் சிங்கம் ஒன்று புகுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சோனாரா நகரை சேர்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீட்டின் முன்கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டினுள் வினோதமான சத்தம் கேட்பதை இருவரும் உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்து சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை தேடி போனார்கள். அப்போது கண்ட காட்சி அவர்களை பயத்தில் உறையவைத்தது.

அவர்களது வீட்டுக்குள் சிங்கம் ஒன்று சகஜமாக உலாவிக்கொண்டிருந்தது. அதை கண்டதும் இருவரும் பயத்தில் அலறினர். இதை கேட்டு பதறிய மலை சிங்கம் வீட்டின் கழிவறைக்குள் ஓடிவிட்டது.

உடனே அந்த தம்பதி சாதுரியமாக செயல்பட்டு கழிவறையின் கதவை இழுத்து மூடினர். பின்னர் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் கழிவறைக்குள் படுத்துக்கிடந்த சிங்கத்தை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதனை கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.

Next Story