தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது


தாக்குதலுக்கு ஆளான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புகிறது
x
தினத்தந்தி 21 Sep 2019 6:59 AM GMT (Updated: 21 Sep 2019 7:50 PM GMT)

ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

வாஷிங்டன்,

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமாக புக்யாக்கில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், குராய்ஸ் எண்ணெய் வயல் மீதும் கடந்த 14-ந்தேதி அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்கள் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றபோதும், தாக்குதலின் பின்னால் இருந்தது ஈரான் என அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்காவோ, சவுதி அரேபியாவோ தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா கூடுதல் படையினரை அனுப்பி வைக்கிறது.

இதை அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் வாஷிங்டன் பென்டகனில் நிருபர்களிடம் பேசுகையில், “வான்தாக்குதலையும், ஏவுகணை தாக்குதல்களையும் தடுக்கிற வகையில் தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்க படையினர், சவுதிக்கு அனுப்பப்படுகின்றனர்” என கூறினார்.

ஆனால் அங்கு செல்லக்கூடிய படை வீரர்களின் எண்ணிக்கை பற்றியோ, எப்போது அவர்கள் அங்கு செல்வார்கள் என்பது பற்றியோ கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.

Next Story