மக்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை- ஈரான் கண்டனம்


மக்களுக்கு  உணவு, மருந்து  கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை-  ஈரான் கண்டனம்
x
தினத்தந்தி 21 Sep 2019 8:42 AM GMT (Updated: 21 Sep 2019 8:42 AM GMT)

ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை விதித்து உள்ளதாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது

வாஷிங்டன்

சவூதி அரேபியாவில் கச்சா  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா ஒரு புதிய பொருளாதார  தடைகளை விதித்தது. அந்த தடை ஈரானின் மத்திய வங்கி மற்றும் செல்வ நிதியை இலக்காகக் கொண்டது ஆகும். 

ஈரானின் வெளியுறவு மந்திரி இன்று அதன் மத்திய வங்கிக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை சாதாரண ஈரானியர்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைப்பதை தடுக்கும்  முயற்சியாக  உள்ளது என கண்டனம் செய்தார், மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்க விரக்தியின் அறிகுறியாகும் என கூறி உள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறும்  ஐநா பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் வந்த  ஈரானின் வெளியுறவு மந்திரி  முகமது ஜவாத் ஸரீஃப் கூறியதாவது:-

இது அமெரிக்காவின்  விரக்தியின் அறிகுறியாகும். அவர்கள் ஒரே அமைப்பு மீண்டும் மீண்டும் தடைவிதிப்பதன் பொருள் ஈரானிய தேசத்தை மண்டியிடவைக்கும்.  ‘அதிகபட்ச அழுத்தத்தின்’ கீழ் கொண்டுவருவதற்கான அவர்களின் முயற்சி தோல்வியடைந்து விட்டது.

ஈரானிய மக்களுக்கு  உணவு மற்றும் மருந்து கிடைப்பதை தடுப்பது  ஆபத்தானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

இதற்கிடையில், பல ஈரானிய சேவையகங்கள் மற்றும் வலைத்தளங்கள் - சில பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளானதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.

ஆனால் நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனமான என்.ஐ.ஓ.சியின் வலைத்தளங்கள் சாதாரணமாக செயல்படுவதாகத் தோன்றியது. பொதுமக்கள் தங்கள் இணைய அணுகல் பாதிக்கப்படவில்லை என கூறி உள்ளனர்.

இணைய இணைப்பைக் கண்காணிக்கும் அமைப்பான நெட் பிளாக்ஸ், ஈரானில் சில இணைய சேவைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல்  இடைப்பட்ட இடையூறுகளை காட்டியது  என கூறினார்.

Next Story