இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; 20 பேர் பலி
இந்தோனேசிய நாடு புவி தட்டுகள் அடிக்கடி நகரும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ஜகார்த்தா,
இந்தோனேசிய நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தின் அம்போன் நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.
பீதியடைந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மேம்பாலங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
Related Tags :
Next Story