இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்


இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:30 PM GMT (Updated: 29 Sep 2019 7:59 PM GMT)

நாடாளுமன்றம் முடக்கம் சட்ட விரோதம் என கோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக, இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாடாளுமன்றத்தை 5 வார காலத்துக்கு முடக்கி பிரதமர் போரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுத்தார். அதை ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்றார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான கெடு நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்குத்தான் போரிஸ் ஜான்சன் இப்படி செய்தார் என்பது எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் பலரின் குற்றச்சாட்டும் ஆகும்.

ஆனால் அவரோ, புதிய அரசின் கொள்கைகளை அறிவித்து ராணி இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகத்தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக கூறிய விளக்கம் ஏற்கப்படவில்லை.

அவரது நடவடிக்கைக்கு எதிராக, ‘பிரெக்ஸிட்’ எதிர்ப்பாளரான இந்திய வம்சாவளி ஜினா மில்லர், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து நாடாளுமன்ற முடக்கம், சட்டவிரோதம் என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

இது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தர்மசங்கடமாக அமைந்தது. இது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன், அவருடன் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story