ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் - உக்ரைனில் ருசிகர சம்பவம்


ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் - உக்ரைனில் ருசிகர சம்பவம்
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 9:03 PM GMT)

உக்ரைனில் ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கீவ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதே சமயம் ஒரு ஆண் உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த நிலையில், அந்நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த அலெக்சாண்டர் கோண்ட்ரட்யுக் (வயது 24) என்ற இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக தனது நெருங்கிய உறவினரான ஜினாய்டா இல்லரியோனோவ்னா (81) என்ற மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். இவர் உடல் ஊனமுற்றவர் ஆவார்.

இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அலெக்சாண்டர்-ஜினாய்டா தம்பதி இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தங்களுக்கு இடையில் உன்னதமான காதல் இருப்பதாலேயே தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் ஜினாய்டாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் திருமணத்தின்போது மட்டுமே அலெக்சாண்டரை தாங்கள் பார்த்ததாகவும் அதன் பிறகு ஜினாய்டா தனியாகவே வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். விசாரணையில் இது போலியான திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டால் அலெக்சாண்டரை ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்க முடியும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது குறித்து விசாரிக்க தங்களுக்கு நேரம் இல்லை எனவும், போலியான திருமணம் என பரவும் செய்தியால் அலெக்சாண்டர் கவலை அடையவில்லை என்றால் அவர் தனது திருமண வாழ்க்கையை தொடரலாம் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story