‘சார்ஜ்’ போட்டபடியே பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி பலி


‘சார்ஜ்’ போட்டபடியே பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி பலி
x
தினத்தந்தி 1 Oct 2019 11:14 PM GMT (Updated: 1 Oct 2019 11:14 PM GMT)

சார்ஜ் போட்டபடியே பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி ஒருவர் பலியானார்.

அஸ்தானா,

கஜகஸ்தான் நாட்டின் பாஸ்டோப் நகரை சேர்ந்தவர், சிறுமி ஆல்வா அசெட்கிசி (வயது 14). பள்ளி மாணவியான இவர் இசை கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் இரவில் செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல இரவு செல்போனில் பாடல் கேட்டபடியே தூங்க சென்றார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் ‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை தலைக்கு அருகில் தலையணையிலேயே வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார்.

மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, சிறுமியின் தலையணை அருகே செல்போன் வெடித்து சிதறி கிடந்தது. சிறுமி தலையில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடு இரவில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆல்வா அசெட்கிசி படுக்கையிலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story