பெரு நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி


பெரு நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2019 10:45 PM GMT (Updated: 2 Oct 2019 8:14 PM GMT)

பெரு நாட்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 23 பேர் பலியாயினர்.

லிமா,

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் குவிஸ்பிகாஞ்சி மாகாணத்தில் உள்ள அமேசான் மழைக்காடு நகரமான புவேர்ட்டோ மால்டோனாடோவில் இருந்து கஸ்கோ நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கஸ்கோவில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

மேலும் சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story