ஈராக் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு


ஈராக் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2019 12:53 AM GMT (Updated: 5 Oct 2019 12:53 AM GMT)

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

பாக்தாத்,

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.  கடந்த 4 நாட்களாக அங்கு கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்று சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 இதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,600 க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாக்தாத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதேவேளையில், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க அரசு உடனடியாக ஐநா கண்காணிப்பின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story