உலகில் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை வளர்த்து, கொன்று, விற்று பணம் குவிக்கும் கும்பல்


உலகில் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை வளர்த்து, கொன்று, விற்று பணம் குவிக்கும் கும்பல்
x
தினத்தந்தி 6 Oct 2019 7:27 AM GMT (Updated: 6 Oct 2019 9:32 AM GMT)

உலகில் அழியும் நிலையில் உள்ள லட்சக்கணக்கான விலங்குகளை செல்ல பிராணிகளாக வளர்த்து அவற்றை கொன்று, விற்று பணம் குவிக்கும் அவல நிலை தொடர்கதையாகி வருகிறது.

லண்டன்,

உலகில் வசித்து வரும் உயிரினங்களில் பல அழிவின் விளிம்பு நிலையில் உள்ளன.  அவற்றை பாதுகாக்க நல அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன.

எனினும், அவற்றை சிலர் செல்ல பிராணிகள் என்ற போர்வையில் வளர்த்து பின் அவற்றை உயிருடனோ அல்லது கொன்றோ விற்பனை செய்து பணம் குவிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிர்ச்சி அளிக்கும் தகவலை புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

விலங்குகளில் தோலுக்காக நைல் முதலை, ரோமங்கள் கொண்ட சீல் விலங்கு, மலை வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, நீர் யானை ஆகிய 5 விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.  அதனை விட செல்ல பிராணிகளாக அவற்றை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அந்த இனங்கள் வேகமுடன் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

கடந்த 2011-2015 ஆண்டுகளில் 1 லட்சத்து 89 ஆயிரம் நைல் முதலைகளின் தோல்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.

நமீபியாவில் சீல் விலங்குகளின் குட்டிகள் ரோமங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பின் அடித்து அல்லது மூச்சு திணற செய்து கொல்லப்படும் கொடூரங்கள் நடைபெறுகின்றன.

பின் அந்த ரோமங்கள் அலங்கார கைப்பைகள் மற்றும் கையுறைகள் தயாரிக்க கொண்டு செல்லப்படும்.


இவற்றில் யானைகள் ஒரு புறம் தந்தங்களுக்காகவும், மறுபுறம் அவற்றின் தோல்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.  ஜாக்கெட்டுகள் மற்றும் காரின் உட்புற சொகுசு விரிப்புகளுக்கு யானை தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வரிக்குதிரைகளும் அவற்றின் தனித்தன்மை வாய்ந்த கருப்பு, வெள்ளை நிற தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன.  அவை பின்னர், வீடுகள் மற்றும் வணிக நிறுவன கட்டிடங்களை அலங்கரிக்கும் தரை விரிப்புகளாக பயன்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் 5 லட்சம் பால் வகை பைத்தான் பாம்புகள் உயிருடன் ஏற்றுமதி செய்யப்பட்டன.  இவற்றை பெருமளவில் அமெரிக்கா வாங்கி கொள்கிறது.

ஆப்பிரிக்காவின் கிரே வண்ண கிளிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்றன.  அவை பிடிபட்டு, கடத்தப்படும்பொழுது அதிகளவில் அழிவை சந்திக்கின்றன.

எறும்பு தின்னிகள் உலகில் அதிகம் கடத்தலுக்கு இலக்கான பாலூட்டி இனம் ஆகும்.  இவற்றில் சில உயிருடன் நீரில் வைத்து கொதிக்க வைக்கப்படுவதும், உயிருடன் தோலுரிக்கப்படும் அவலமும் நடந்து வருகிறது.  இவை கிழக்கத்திய நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் அதிக மதிப்புடையவையாக உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் அவற்றின் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு உள்ளன.

நைல் முதலைகளின் தோல்கள் 1,89,000

சீல் குட்டிகள் (1,000 ஒரு வருடத்திற்கு)

பால் பைத்தான் பாம்புகள் (4 ஆண்டுகளில் 5 லட்சம்)

கிரே வண்ண கிளிகள் (2,89,006)

தென்ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் (1,000 ஒரு வருடத்தில்)

இவை தவிர, எம்பரர் வகை தேள், ஆமை, சவன்னா காடுகளில் வசிக்கும் பெரிய வகை பல்லிகள் உள்ளிட்டவையும் வேட்டைக்கு இலக்காகின்றன.  ஆப்பிரிக்காவில் கடந்த 4 வருடங்களில் 27 லட்சம் விலங்குகள் இந்த வகையில் கொல்லப்பட்டு உள்ளன என அந்த அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஒருபுறம் அமேசான் காடுகள் தீக்கிரையாகி வருகிறது என கூக்குரல் எழும் நேரத்தில் மற்றொரு புறம் இதுபோன்ற விலங்கு வதை செயல்களால் ஆப்பிரிக்காவின் உயிர்ச்சூழல் கட்டமைப்பு சேதமடைவதுடன், நீண்ட கால பொருளாதார மற்றும் வாழ்வியல் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இதுபற்றி உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகரான டாக்டர் நீல் டி குரூஸ், சட்டப்பூர்வ முறையில் விலங்குகள் விற்பனை மேற்கொண்டாலும், இது சரியானது அல்ல.  அவை வன விலங்குகள்.  தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்ல என கூறியுள்ளார்.

மனிதர்களின் தனிப்பட்ட இன்பத்திற்காக வேட்டையாடப்படும் இவற்றுக்கும் வாழ்க்கை உண்டு என நினைப்பதில்லையா? என நீல் டி குரூஸ் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story