சவூதி இளவரசரை கோபப்படுத்தியதால் இம்ரான் கான் ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்தார்


சவூதி இளவரசரை கோபப்படுத்தியதால் இம்ரான் கான் ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்தார்
x
தினத்தந்தி 8 Oct 2019 8:47 AM GMT (Updated: 8 Oct 2019 9:49 AM GMT)

சவூதி இளவரசரை கோபப்படுத்தியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்; ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்து உள்ளார்.

கராச்சி

கடந்த மாதம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர், இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக  சவுதி அரேபியா  சென்று இருந்தார். அப்போது அமெரிக்காவிற்கான  பயணத்திற்காக, சவுதி  பட்டத்து இளவரசர் தனது "சிறப்பு விமானத்தை" எடுத்துச் செல்லுமாறு இம்ரான்கானை  வலியுறுத்தினார். 

சமீபத்தில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்ற  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சவூதி இளவரசரின் விமானத்தை பயன்படுத்தினார். அமெரிக்காவில் இருந்து  இம்ரான்கான் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே இம்ரான்கான் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் நியூயார்க் கென்னடி விமான நிலையத்திற்கே திரும்பியது.  தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்ய முயன்றனர். ஆனால், அதை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதையடுத்து தங்கியிருந்த ஓட்டலுக்கே இம்ரான்கான் திரும்பினார். 

ஆனால் பாகிஸ்தான் வார இதழ் ஒன்றில் ஐ.நா பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமரின்  சில நடவடிக்கைகளால்  கோபமடைந்த சல்மான் தனது தனியார் ஜெட் விமானத்தை திரும்ப அழைத்து கொண்டதாகவும்.  விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எதுவும் இல்லை  என்றும் ஒரு பரபரப்பான செய்தி பாகிஸ்தான் வார இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், துருக்கி ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் மற்றும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ஆகியோர் கூட்டாக இஸ்லாமிய முகாமை பிரதிநிதித்துவப்படுத்த திட்டமிட்டுள்ளதால் முகமது பின் சல்மான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும்.தனது வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் ஈரானுடன் பாகிஸ்தான் தொடர்பு கொண்டதால் அவர் தனது குளிர்ச்சியை இழந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

பாகிஸ்தான் தூதுக்குழுவை அகற்றுமாறு தனது தனியார் ஜெட் விமானத்திற்கு உத்தரவிட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த செய்தியை  "முற்றிலும் புனையப்பட்ட கதை" என்று குறிப்பிட்டு உள்ளார். 

Next Story