நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் ஐ.நா. சபை இந்த மாத இறுதிக்குள் மொத்த நிதியும் தீரும் அபாயம்


நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் ஐ.நா. சபை இந்த மாத இறுதிக்குள் மொத்த நிதியும் தீரும் அபாயம்
x
தினத்தந்தி 9 Oct 2019 12:00 AM GMT (Updated: 8 Oct 2019 8:05 PM GMT)

ஐ.நா. சபை நிதி பற்றாக்குறையால் தள்ளாடி வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அதன் மொத்த நிதியும் தீரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்;

மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இனம், மொழி மற்றும் சமய வேறுபாடுகளை நீக்கிப் நாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்; போன்றவை ஐ.நா. சபையின் தலையாய பணிகள் ஆகும்.

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு அதன் உறுப்பு நாடுகள் நிதி வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபைக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் ஐ.நா.வுக்கு தேவையான நிதியை உறுப்பு நாடுகள் வழங்கும்.

இந்த நிலையில் ஐ.நா. சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து, சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையில் பணியாற்றும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. சபை 230 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,635 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம்) பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை.

2018-19-ம் ஆண்டுக்கான நிதியாக 5.4 பில்லியன் டாலர் (ரூ.38 ஆயிரத்து 399 கோடியே 40 லட்சம்) வரையறுக்கப்பட்டது. அதில் 22 சதவீத பங்களிப்பை அமெரிக்கா வழங்கியது. ஆனாலும் ஒட்டு மொத்த தொகையில் 70 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஐ.நா நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும் என இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கப்பட்டது. ஆனால் உறுப்பு நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை.

எங்கள் பணப்புழக்க இருப்புக்களை இந்த மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது.

37 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், செலவுகளை குறைக்கும் விதமாகவும் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளை குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.

அதேபோல் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அன்டணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 

Next Story