11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்


11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:45 PM GMT (Updated: 8 Oct 2019 8:06 PM GMT)

ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்த 11 தலீபான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான் இயக்கம் விடுவித்தது.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணம் பாக் இ ‌‌ஷமல் பகுதியில் 2018-ம் ஆண்டு மே மாதம் துணை மின்நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய என்ஜினீயர்கள் அவர்களது ஆப்கானிஸ்தான் டிரைவர் ஆகியோர் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர். இதற்கு உடனடியாக எந்த இயக்கமும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

பின்னர் அவர்களை தலீபான் பயங்கரவாத இயக்கத்தினர் கடத்தியதாக தெரியவந்தது. அவர்களில் ஒரு இந்திய என்ஜினீயர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். சர்வதேச நிறுவனம் ஒன்றுக்காக பணிபுரிந்து வந்த அந்த என்ஜினீயர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.

ஆப்கானிஸ்தான் சமரசத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜால்மாய் கலில்சாத் மற்றும் முல்லா அப்துல்கனி பராடார் தலைமையிலான தலீபான் இயக்க பிரதிநிதிகள் 2 பேர் பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில் அங்குள்ள இஸ்லாமாபாத் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள தலீபான் இயக்கத்தின் 11 உயர்மட்ட உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாக தலீபான் பிரதிநிதிகள் அறிவித்தனர். அதற்கு பதிலாக பணய கைதிகளாக உள்ள 3 இந்திய என்ஜினீயர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை அவர்கள் ரேடியோ மூலம் அறிவித்தனர்.

ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் யார்? எங்கு விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். விடுவிக்கப்பட்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டவர்களா? அல்லது அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டவர்களா? என்பதையும் தெரிவிக்கவில்லை. விடுவிக்கப்பட்ட தலீபான்களுக்கு வரவேற்பு கொடுப்பதுபோல ஒரு புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

காபூல் நகரில் பாக்ராம் ராணுவ தளத்தில் உள்ள மிகப்பெரிய சிறையில் இருந்து தலீபான்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தளத்தை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தாலும், இன்னும் அமெரிக்க படைகள் அங்கு உள்ளன. இதனால் தலீபான்களை விடுவித்தது யார் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகமோ, அதிபர் அலுவலகமோ இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டன. இந்தியா தரப்பில் இருந்தும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

விடுவிக்கப்பட்டவர்களில் தலீபான் தலைவர்களான சேக் அப்துல் ரகிம், மாவ்லாய் அப்துல் ர‌ஷித் ஆகியோரும் அடங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் தலீபான் ஆட்சியின்போது கிளர்ச்சி படையின் கவர்னர்களாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story