பாகிஸ்தானில் ராணுவத்தின் கை ஓங்குகிறது? தலையாட்டி பொம்மையாகும் இம்ரான்கான்


பாகிஸ்தானில் ராணுவத்தின் கை ஓங்குகிறது? தலையாட்டி பொம்மையாகும் இம்ரான்கான்
x
தினத்தந்தி 10 Oct 2019 5:18 AM GMT (Updated: 10 Oct 2019 5:18 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சீனாவுக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ராணுவத்தின் அதிகார மையத்தை உறுதி செய்துள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகராக ராணுவம் தனி அதிகார ஆட்சி நடத்துவதாக புகார்கள் கூறப்படுவதுண்டு. பாகிஸ்தான் வரலாற்றில் பாதியளவுக்கு ராணுவ ஆட்சிதான் நடைபெற்றுள்ளது. 1947 முதல் மூன்று ராணுவக் கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் அந்த நாட்டின்  ராணுவத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. மோசமான அரசியல் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி நிர்வாகம் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்பொழுதெல்லாம் வீழ்த்தப்படுகிறதோ அப்போது ராணுவத்தின் கை ஓங்கி ராணுவ ஆட்சி நடைபெறும். வல்லரசு நாடுகளின் கைப்பாவையாகவே பாகிஸ்தான் ராணுவமும் செயல்படும்.

 ராணுவமே ஆயுத விற்பனைக்காக மறைமுகமாகத் பயங்கரவாதப் போக்கினை ஊக்குவிக்கும். ராணுவ பலத்தின் மூலமே பாகிஸ்தான் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கின்றன. ராணுவ ஜெனரல்களின் நிழலில் ஒடுங்கித்தான் பாகிஸ்தான் அதிபர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். 

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் தேர்ந்து எடுக்கப்பட்டதும் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் தான். பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக இம்ரான்கான் இருக்கிறார் என்பது பரவலான குற்றச்சாட்டு  உண்டு.

தேர்தல் அன்று அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ராணுவத்தினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர் என்ற புகாரும் உண்டு. வாக்குச்சாவடிக்கு உள்ளேயே ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டு, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இம்ரான்கான் கட்சித்தவிர, மற்றக்கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் வெளியே விரட்டப்பட்டனர் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையமே கூறியிருக்கிறது. 

இந்நிலையில் இம்ரான் கான் பிரதமரானதும் ஜெனரல் பாஜ்வாக்கு மூன்றாண்டு காலம் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. 
இந்த  நடவடிக்கையை சீனா வரவேற்றது, அவரை இராணுவத்தின் "அசாதாரண தலைவர்" என்றும் சீன அரசாங்கத்தின் "பழைய நண்பர்" என்றும் கூறி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சீன அதிபர் ஜி  ஜெனரல் பாஜ்வா சந்தித்தார். இதை தொடர்ந்து பொருளாதார தாழ்வார  திட்டங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான சீன பணியாளர்களைப் பாதுகாக்க பாகிஸ்தான்  இராணுவம் ஒரு தனிப் படையை அனுப்பி உள்ளது.

ராணுவத்தின்  தலையாட்டி பொம்மையாக இம்ரான் கான் இருக்கிறார் என்பதற்கு சமீபத்தில்  இம்ரான்கான் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டபோதே உண்மை வெட்டவெளிச்சமானது. சீனாவுக்கு இம்ரான் கானுடன் சென்ற பாஜ்வா, சீனத் தலைவர்களுடனான சந்திப்பிலும் உடன் இருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சீனாவுக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ராணுவத்தின் அதிகார மையத்தை உறுதி செய்துள்ளார்.

தனியாகவும் சீன ராணுவ கமிஷன் தலைவர் ஜூ கியூலியாங் உடன் பேச்சு நடத்திய பாகிஸ்தான் தளபதி, இருநாட்டு ராணுவ உறவுகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா.பொதுக்குழு கூட்டத்திலும் இம்ரான்கானுடன் ராணுவத் தலைமைத் தளபதி பாஜ்வா, ஐ.எஸ்.ஐ தலைவர் பையஸ் அகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனர். பாகிஸ்தானின் முக்கிய விவகாரங்களிலும் வெளிநாட்டு கொள்கைகளிலும் ராணுவத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. 

பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வழிகளைக் கண்டறிய பாஜ்வா உயர்மட்ட வணிகத் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். இந்த ஆண்டு மூன்று கூட்டங்கள் கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள பெரிதும் பாதுகாக்கப்பட்ட இராணுவ அலுவலகங்களில் நடந்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது, அங்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் வணிகத் தலைவர்களிடம் பொருளாதாரத்தை எவ்வாறு சரிசெய்வது, முதலீடுகள் செய்ய எது வழிவகுக்கும் என ஆலோசனை நடத்தி உள்ளார்.  இராணுவ செய்தித் தொடர்பாளர் கூட்டங்கள் குறித்து கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Next Story