அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் 15 பேர் பலி


அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் 15 பேர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:17 PM GMT)

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர்.

அங்காரா,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டில் உள்நாட்டு போர் தொடங்கியது. இதை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் காலூன்றி தாக்குதல் நடத்தினர்.

இதில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் அங்கு களம் இறங்கியது. அதே சமயம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் சிரிய ராணுவத்துடன் கைகோர்த்தது.

மேலும் அமெரிக்கா மற்றும் சிரிய ராணுவத்துடன் இணைந்து குர்து இன போராளிகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டனர். அதே சமயம் சிரியாவின் அண்டை நாடான துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குர்து அமைப்பினருக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.

அகதிகளை குடியமர்த்த...

இதனால் சிரியாவில் இருக்கும் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இதில் குர்து இன போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தது.

இதற்கிடையே சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

இதற்காக சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி தீவிர ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த சூழலில் சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது எனவும், வடக்கு எல்லை பகுதியிலிருந்து அமெரிக்க படையினர் திரும்ப பெறப்படுவார்கள் எனவும் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

எச்சரிக்கையை மீறி தாக்குதல்

அதன்படி அமெரிக்க படை வீரர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறினர். இதுவரை அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த பகுதியில் சண்டையிட்டு வந்த குர்து போராளிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவில் படைகளை திரும்பப்பெற்றதற்காக டிரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியிலேயே விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.

அதே சமயம் மனித தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால், அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து, டிரம்ப் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி நேற்று முன்தினம் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தின.

தற்காப்பு நடவடிக்கை

அதனை தொடர்ந்து நேற்று சிரிய எல்லைக்குள் துருக்கி ராணுவம் நுழைத்து, தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது. துருக்கியின் இந்த அத்துமீறிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் உள்பட 15 பேர் பலியானதாக சிரியாவில் உள்ள மனித உரிமை கண் காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம் துருக்கியின் தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்து ஐ.நா. சபைக்கு துருக்கி கடிதம் அனுப்பியது.

அதில் “துருக்கி தனது தற்காப்புக்காக சிரியாவின் வடக்கு பகுதியில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக துருக்கி எல்லை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story