சிரியாவில் வலுக்கும் மோதல்: துருக்கி-குர்து படைகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் சொல்கிறார்


சிரியாவில் வலுக்கும் மோதல்: துருக்கி-குர்து படைகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 9:16 PM GMT)

சிரியாவில் துருக்கி-குர்து படைகள் இடையே வலுத்து வரும் மோதல் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது. வான்வழியாகவும், தரைவழியாகவும் நடத்தி வரும் அதிரடி தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் குர்து இன போராளிகள் நடத்திய பதில் தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

குர்து போராளிகள் மீதான துருக்கியின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு உடனடியாக சண்டையை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் துருக்கி ராணுவம் மற்றும் குர்து போராளிகள் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்களிடம் 3 வழிகள் உள்ளன. ஒன்று ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பி ராணுவ ரீதியாக வெல்வது. 2-வது துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பது. 3-வது துருக்கி மற்றும் குர்து போராளிகள் இடையே மத்தியஸ்தம் செய்வது. இதில் எங்களால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.


Next Story