ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்


ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 12 Oct 2019 3:56 PM GMT (Updated: 12 Oct 2019 3:56 PM GMT)

ஜப்பானை ‘ஹகிபிஸ் புயல்‘ தாக்கியதால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ,

ஜப்பானை  ‘ஹகிபிஸ் ‘  எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க போவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி  ‘ஹகிபிஸ் ‘ புயல் இன்று  ஜப்பானை  சூறையாடியது. 

61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பான் கடுமையான மழையையும், சூறைக்காற்றையும் சந்தித்துள்ளது.  சூறைக்காற்று மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சூறைக் காற்றில் பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 1,600 விமானங்கள் மற்றும் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.  இதுமட்டுமின்றி மத்திய டோக்கியோவில் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, #PrayForJapan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஜப்பான் நாட்டிற்காக பிரார்த்தனை செய்யுமாறு பலரும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னதாக ஜப்பானில் 1958-ஆம் ஆண்டு ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story