துருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்- பிரான்ஸ் அரசாங்கம் முடிவு


துருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்- பிரான்ஸ் அரசாங்கம் முடிவு
x
தினத்தந்தி 13 Oct 2019 2:09 AM GMT (Updated: 13 Oct 2019 2:09 AM GMT)

துருக்கி நாட்டிற்கு ஆயுத விற்பனையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாரீஸ்,

துருக்கி எல்லையையொட்டி சிரியா நாட்டின் வடபகுதியில் குர்து இன போராளிகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை குறிவைத்து கடந்த 9-ந் தேதி துருக்கி ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதனால், அந்த பகுதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி விட்டனர்.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே, சமரசம் செய்து வைக்க தயார் என்று அறிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் டுவிட்டர் பதிவில், “சிரியா மீதான துருக்கி ராணுவத்தின் ஒருதலைபட்சமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். துருக்கியின் செயல்பாடுகள் லட்சக்கணக்கான பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது” என்று பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் துருக்கி நாட்டிற்கு ஆயுத விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சிரியா மீது துருக்கி நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தால் ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களை துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும் எந்தவொரு திட்டத்தையும் இடைநிறுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 

வருகின்ற 14 ஆம் தேதி லக்சம்பர்க் நகரில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு சபையில், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story