சிரியாவில் குர்தீஷ் போராளிகள் தாக்குதல்; துருக்கி ராணுவ வீரர்கள் 75 பேர் பலி


சிரியாவில் குர்தீஷ் போராளிகள் தாக்குதல்; துருக்கி ராணுவ வீரர்கள் 75 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2019 7:01 AM GMT (Updated: 13 Oct 2019 7:01 AM GMT)

சிரியாவில் குர்தீஷ் போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 75 பேர் கொல்லப்பட்டனர்.

ராஸ் அல்-ஐன்,

சிரியா மற்றும் துருக்கி நாடுகளின் எல்லை பகுதியில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை எழுந்துள்ளது.  சிரியா நாட்டின் வடகிழக்கு எல்லை பகுதி துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது.  இங்கு குர்திஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை ஆதரவு அளித்து வந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து கொண்ட அதிபர் டிரம்ப், படைகள் வாபஸ் பெறப்படும் என கடந்த புதன்கிழமை கூறினார்.  கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான வீரர்களை நாங்கள் இழந்து விட்டோம்.  கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டு விட்டது என தனது நடவடிக்கையை டிரம்ப் நியாயப்படுத்தினார்.  இதனால் சிரிய ஜனநாயக படை, அமெரிக்க ராணுவ ஆதரவின்றி போனது.

இதனை தொடர்ந்து, சிரியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகளை விரட்டியடிக்கும் ராணுவ நடவடிக்கைகளை துருக்கி தொடங்கியது.  இதனிடையே, வடகிழக்கு எல்லை பகுதியில் துருக்கி ராணுவ வீரர்கள் மீது குர்தீஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் துருக்கி நாட்டின் 75 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  19 பேர் காயமடைந்தனர்.

இரு நாடுகளின் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலைக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் வருத்தம் தெரிவித்து உள்ளன.

Next Story