மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்: தென் கொரிய ‘பாப்’ பாடகி மர்ம சாவு


மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்: தென் கொரிய ‘பாப்’ பாடகி மர்ம சாவு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 4:51 PM GMT)

தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர்.

சியோல்,

பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக சுல்லி திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக ‘நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுல்லி, மேலாடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத அவர், பலமுறை இன்ஸ்டாகிராம் நேரலையில் மேலாடையின்றி தோன்றி அதிரவைத்து வந்தார். இதனால் அவர் பழமைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார்.

இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் சுல்லி பிணமாக கிடந்தார். அவரது மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து விசாரித்து வரும் போலீசார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுல்லியின் நெருங்கிய தோழியும், சக ‘பாப்’ பாடகியுமான ஜாங்கியூன் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது. 

Next Story