மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்


மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 18 Oct 2019 3:06 PM GMT (Updated: 18 Oct 2019 3:06 PM GMT)

மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ,

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அரசாங்கம், தனது எல்லையில் தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பியிருக்கிறது.

மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மெக்சிகோவிற்கான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து மெக்சிகோ அரசு சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மெக்சிகோவின் பல பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த 311 இந்தியர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று மெக்சிகோவில் இருந்து போயிங் 747 விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இந்தியா வந்துள்ள 311 பேருக்கும் ‘அவசரகால சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை பயன்படுத்தி அவசர காலத்தின் போது இந்தியர்கள் ஒரு வழி பயணமாக இந்தியாவிற்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story