இந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு


இந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:37 PM GMT)

இந்தியாவைவிட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை என்று அமெரிக்காவில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வாஷிங்டன்,

வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இன்றைக்கும் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், மிகச்சிறப்பான, திறமையான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் இருக்கிறது” என்று கூறினார்.

“முதலீட்டாளர்கள் எதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர், “கோர்ட்டு நடைமுறைகள் சற்றே தாமதமாக இருந்தாலும்கூட, இந்தியா ஒரு வெளிப்படையான, திறந்த சமூகத்தை கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி, இந்தியாவில் வேலை செய்கிறது. ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் இதை விட சிறப்பாக எதையும், பெற்று விட முடியாது. ஜனநாயகத்தின் மீது நேசம், முதலாளித்துவத்தின் மீது மரியாதையும் வைத்திருக்கிற சூழல் இந்தியாவில் இருக்கிறது. எனவே இந்தியாவை விட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை” என்று பதில் அளித்தார்.

காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற அந்த துறையினரின் கேள்விகளுக்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர், “காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்குவது தவிர்த்து, இந்த துறையின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளேன். இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் எதையும் தர இயலாது” என்றார்.

இந்திய பொருளாதாரம், மந்த நிலையில் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், “பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தோம். அடுத்த பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்கவும் முடியாது. எனவே பிரச்சினைக்குரிய துறைகளில் இப்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்” என பதில் அளித்தார்.

“ஒட்டுமொத்தமாக பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத்தக்க விதத்தில், உள்கட்டமைப்புக்கான செலவுகள் முன்னிறுத்தப்படும். பொதுமக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கிறபோது, பயன்பாடு அதிகரிக்கும். எனவேதான் கிராமங்களை சென்றடையும்படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Next Story