ரஷ்யாவில் தங்க சுரங்கத்தில் அணை உடைந்து 13 பேர் பலி
ரஷ்யாவில் உள்ள தங்க சுரங்கத்தில் அணை உடைந்ததில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
கிராஸ்னோயார்ஸ்க்,
ரஷ்ய நாட்டின் சைபீரிய பகுதியில் கிராஸ்னோயார்ஸ்க் என்ற இடத்தில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் நீரை சேமித்து வைப்பதற்காக அணை ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த அணை திடீரென இன்று உடைந்துள்ளது. அதிலிருந்து வெளியேறிய நீரானது அருகிலிருந்த பகுதிகளுக்குள் புகுந்தது. இதில் அந்த பகுதியில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிக்கி அவர்களில் 13 பேர் பலியாகி உள்ளனர். 13 பேரை காணவில்லை. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ரஷ்ய சுகாதார மந்திரி வெரோனிகா ஸ்குவொர்ட்சோவா காயமடைந்தோருக்கு வழங்கும் சிகிச்சைகளை மேற்பார்வையிட்டார். மண்டல ஆளுநர் அலெக்சாண்டர் உஸ், வழக்கறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர்.
இதுவரை 270க்கும் மேற்பட்டோர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த அணை விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாவில் காக்கசியா பகுதியில் அமைந்த மிக பெரிய நீர்மின் உலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 75 பேர் பலியாகினர்.
Related Tags :
Next Story