ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது


ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது
x
தினத்தந்தி 21 Oct 2019 8:50 AM GMT (Updated: 21 Oct 2019 8:50 AM GMT)

ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்கள் இன்று தங்களது முதல்பக்கங்களை கருப்பாக வெளியிட்டன.

சிட்னி,

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. பத்திரிகைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘ரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  பத்திரிகையாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பாக மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும்  தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிகையான தி  ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப்பில் அச்சிடப்பட்ட கருப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை  (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார். 

மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறீர்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டார். 

ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார்.


Next Story