சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி


சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி
x
தினத்தந்தி 21 Oct 2019 10:32 PM GMT (Updated: 21 Oct 2019 10:32 PM GMT)

நாஜி படையின் பதுங்கு குழி தற்போது சொகுசு ஓட்டலாக மாற உள்ளது.

பெர்லின்,

2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற் காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்கு குழியை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 1942-ம் ஆண்டில் 1,000 தொழிலாளர்களை கொண்டு 300 நாட்களில் இந்த பதுங்கு குழி கட்டி முடிக்கப்பட்டது. 3.5 மீட்டர் தடிமன் கொண்ட சுவர்களுடன் 18,000 பேர் தங்குவதற்காக இது கட்டப்பட்டது. நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த பதுங்கு குழியை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதை இடிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் தேவைப்பட்டதாலும், இடிக்கும்போது அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளும் தரைமட்டமாகக் கூடும் என்பதாலும் அந்த முடிவு கைவிடப்பட்டது. அதன் பின்னர் இந்த பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் இந்த பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த ஓட்டல் 5 அடுக்குமாடிகளுடன் ‘பிரமிடு’ வடிவத்தில் கண்களை கவரும் வண்ணம் பிரமாண்டமாக கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 அறைகளுடன், மதுபான விடுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் என சகலவசதிகளும் இந்த ஓட்டலில் இருக்கும் என என்.எச். ஓட்டல் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த ஓட்டல் 2021-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story