பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2019 4:33 AM GMT (Updated: 23 Oct 2019 4:33 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

முசாபராபாத்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தானிய படைகள் அக்டோபர் 22ந்தேதி படையெடுத்தன.  இதனை கருப்பு நாள் என கடைப்பிடித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரில் அனைத்து சுதந்திர கட்சிகளின் கூட்டணி என்ற பெயரின் கீழ் இணைந்து பல்வேறு அரசியல் கட்சிகள் அமைதி பேரணி ஒன்றை நேற்று நடத்தின.

இந்த பேரணியில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்து கொண்டு தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.  பல்வேறு கட்சிகளும் தங்களது கட்சி கொடிகளை ஏந்தியபடியே ஊர்வலத்தில் சென்றன.

இந்நிலையில், பேரணியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்யும் வகையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இதனால் பேரணியில் கலந்து கொண்டோர் வெவ்வேறு திசைகளில் அலறியடித்தபடி ஓடினர்.  இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  80 பேர் காயமடைந்தனர்.

கடந்த வருடமும் இதேநாளில் முசாபராபாத், ராவலகோட், கொத்லி, கில்ஜித், ராவல்பிண்டி மற்றும் பிற பகுதிகளில் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.

Next Story