நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை


நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
x
தினத்தந்தி 23 Oct 2019 5:19 AM GMT (Updated: 23 Oct 2019 5:19 AM GMT)

நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

வாஷிங்டன்,

நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.

கடந்த மாதம் 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

 விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை  இஸ்ரோ விஞ்ஞானிகள்  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் தொடர்ந்து விக்ரம் லேண்டர் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

செப்டம்பர்-27ந்தேதி சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை தரையிறக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்ட தளத்தின் படங்களை நாசா வெளியிட்டது. செப்டம்பர் 17 அன்று இந்த படங்களை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது.

மாலை வேளையில் படங்கள் எடுக்கப்பட்டதால் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்து இருந்தது. தரையிறங்கும் பகுதி  படமாக்கப்பட்டபோது மாலை நேரமாக இருந்தது, இதனால் பெரிய நிழல்கள் நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்து இருந்தது. 

மேலும்  அக்டோபர் மாதம் விக்ரம் லேண்டர் தரை இறங்கும்  தளத்தை கடந்து செல்லும்போது, லேண்டரைக் கண்டுபிடித்து படம்பிடிக்க முயற்சிக்கும். அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்து இருந்தது.

அதன்படி தற்போது சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை சந்திர மறுமதிப்பீட்டு  ஆர்பிட்டரை (எல்.ஆர்.ஓ) பயன்படுத்தி படம் பிடிக்க மற்றொரு முயற்சியை நாசா மேற்கொண்டது.

செப்டம்பர் 17 அன்று  கடைசியாக படங்களை  ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் 14 ந்தேதி திங்களன்று எடுத்த படங்கள் நல்ல வெளிச்ச நிலையில்  எடுக்கப்பட்டுள்ளன.

சந்திரன் சுற்றுப்பாதையில் சமீபத்தில் பறக்கும்போது எடுக்கப்பட்ட  படங்களில் சந்திரயான் -2 விக்ரம் லேண்டர் பற்றிய எந்த ஆதாரத்தையும் நாசா கண்டுபிடிக்கவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திர மறுமதிப்பீட்டு  ஆர்பிட்டர்  பணிக்கான திட்ட விஞ்ஞானி நோவா எட்வர்ட் பெட்ரோ பி.டி.ஐ-க்கு அனுப்பி உள்ள பிரத்யேக மின்னஞ்சலில்,   

"சந்திர மறுமதிப்பீட்டு  ஆர்பிட்டர் அக்டோபர் 14 அன்று இலக்கு வைக்கப்பட்ட சந்திரயான் -2 விக்ரம் தரையிறங்கும் தளத்தின் பகுதியை படம்பிடித்தது, ஆனால் விக்ரம் லேண்டர் தொடர்பான  எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கேமரா குழு புகைப்படங்களை நன்கு ஆராய மாற்றத்தைக் கண்டறிதல் தொடர்பான நுட்பத்தைப் பயன்படுத்தியது. இந்த அணுகுமுறை, சந்திரனில் புதிய விண்கல் தாக்கங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இது சமீபத்தில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியது என கூறினார்.

சந்திர மறுமதிப்பீட்டு  ஆர்பிட்டர்   திட்ட  துணை விஞ்ஞானி ஜான் கெல்லர் (பி.டி.ஐ. செய்தி நிறுவனம்) விக்ரம் ஒரு நிழலில் அல்லது தேடல் பகுதிக்கு வெளியே விழுந்து இருக்கலாம். குறைந்த அட்சரேகை, ஏறக்குறைய 70 டிகிரி தெற்கே இருப்பதால், இப்பகுதி ஒருபோதும் நிழல்களிலிருந்து முற்றிலும் விடுபடாத பகுதியாகும் என கூறினார்.

Next Story