பிரதமர் மோடிக்கு வெடிகுண்டுகளை கட்டியபடி மிரட்டல் விடுத்த பாகிஸ்தானிய பாடகி
பிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
அதில், இடுப்பில் கைகளை வைத்தபடி, உடலில் டைமருடன் (கடிகாரம்) கூடிய வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உள்ளார். மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன் என்று அதனருகே பதிவிட்டு உள்ளார்.
அவரது இந்த டுவிட்டர் பதிவுக்கு உடனடியாக பலர் பதில் பதிவிட்டு உள்ளனர். அதில் ஒருவர், வாவ்! பாகிஸ்தானின் கலாசார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மற்றொருவர், இந்த உடையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சை பதிவுகளை வெளியிடுவது அவருக்கு புதிதல்ல. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த வரலாற்று முடிவுக்கு பின் கடந்த செப்டம்பரில், பிர்ஜடா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 4 பைத்தான்கள் உள்பட எண்ணற்ற பாம்புகள் மற்றும் ஒரு முதலையுடன் அவர் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன. பிரதமர் மோடி மீது இவற்றை விட்டு தாக்குதல் நடத்தும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டு அவர் சர்ச்சை ஏற்படுத்தினார்.
இதற்கு சிலர் அவரை முட்டாள் என்றும், சிலர் அதிவிரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் விமர்சித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
Related Tags :
Next Story