இம்ரான்கான் பதவி விலக 2 நாள் கெடு - விடுதலை பேரணியில் பாகிஸ்தான் மத குரு ஆவேசம்


இம்ரான்கான் பதவி விலக 2 நாள் கெடு - விடுதலை பேரணியில் பாகிஸ்தான் மத குரு ஆவேசம்
x
தினத்தந்தி 2 Nov 2019 1:34 AM GMT (Updated: 2 Nov 2019 7:23 PM GMT)

இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் என்று விடுதலை பேரணியில் பாகிஸ்தான் மத குரு ஆவேசமாக தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு இம்ரான்கான் ஆட்சியைப் பிடித்தார் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்த நிலையில், ஜாமியத் உலமா இ இஸ்லாம் என்று அழைக்கப்படுகிற மத குருமார்கள் அமைப்பின் தலைவரான மவுலானா பஸ்லுர் ரகுமான் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் 5 நாள் விடுதலைப் பேரணி நடத்தப்பட்டது.

27-ந் தேதி கராச்சியில் தொடங்கிய இந்தப் பேரணி, இஸ்லாமாபாத் வந்து அடைந்தது.

அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மவுலானா பஸ்லுர் ரகுமான் ஆவேசமாக பேசினார். அவர் இம்ரான்கான் பதவி விலக 2 நாள் கெடு விதித்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அரசு கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் மோசடிகள் செய்துதான் ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமர் பதவி விலகியே தீர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை இம்ரான்கான் அரசு சீரழித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (நவாஸ்) தலைவருமான ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story