காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படாது எனத் தகவல்


காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படாது எனத் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2019 7:48 AM GMT (Updated: 2 Nov 2019 9:38 AM GMT)

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடப்பு மாதம் விவாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது தலைமை பொறுப்பு வகிக்கும் பிரிட்டனைச் சேர்ந்த  கரன் பியர்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சிரியாவைச்சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பிரிட்டன் தலைமை பொறுப்பில் இருக்கும் போது, காஷ்மீர் பிரச்சினை பற்றிய விவாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எடுத்துக்கொள்ளப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். 

இக்கேள்விக்கு பதிலளித்த  கரன் பியர்ஸ், “ காஷ்மீர் விவகாரம் பற்றி இந்த மாதத்தில் விவாதிக்க நாங்கள் திட்டமிடப்படவில்லை. உலகில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனவே நடப்பு மாதத்தில் காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்கப்படமாட்டாது” என்றார்.  

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய உறுப்பு நாடுகளாக உள்ள 15 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மாதம் ஒருமுறை என தலைமை பொறுப்பை வகிக்கின்றனர். அந்த வகையில், நடப்பு நவம்பர் மாதத்தில், பிரிட்டனைச்சேர்ந்த ஐநா தூதர் கரன் பியர்ஸ், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக சீனா, பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து ரகசிய விவாதம் நடைபெற்றது. எனினும், எந்த தீர்வுகளும் எட்டப்படாமல் அந்தக்கூட்டம் முடிவு பெற்றது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இவ்விவகாரம் தோல்வியை அளித்தது. 

Next Story