காசா முனையில் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு - பாலஸ்தீன வாலிபர் பலி


காசா முனையில் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு - பாலஸ்தீன வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Nov 2019 10:45 PM GMT (Updated: 2 Nov 2019 7:56 PM GMT)

காசா முனையில் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சிக்கி பாலஸ்தீன வாலிபர் பலியானார்.

காசா,

காசாமுனை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை), காசா முனையில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், இதில் ஒரு வீடு பலத்த சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அந்த ராக்கெட்டுகளில் 8 ராக்கெட்டுகளை வழிமறித்து அழித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து காசாமுனையில் உள்ள ஹமாஸ் போராளிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துள்ளது.

காசாநகரில் வசிப்பவர்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறினர்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் பலியாகி விட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது. பலியானவர், கான் யூனிஸ் நகரத்தில் குண்டு விழுந்ததில் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தில், இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதில் 96 பாலஸ்தீனர்கள் காயம் அடைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.


Next Story